குழந்தை பிறக்கும் போது அதன் தொப்புள் கொடியிலும், எலும்பு மஞ்ஜையிலும் காணப்படும் ஸ்டெம் செல்களைக் கொண்டு பல சிக்கலான நோய்களுக்கு தீர்வு காணலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை முறை தமிழகத்தில் தற்போதுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பாதிப்புக்குள்ளான 8 வயது சிறுமிக்கு, அவளது சகோதரனின் ஸ்டெம் செல் எடுத்து சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஸ்டெம்செல் மூலம் சிகிச்சை அளிப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையை சேர்ந்த தச்சுத் தொழிலாளியான செந்தில்குமார் - சரோஜினி தம்பதிகளின் மகள் தாமிரபரணி. தாமிரபரணிக்கு ஒன்றரை வயது இருந்தபோது தாலசீமியா என்ற நோய் பாதித்தது. இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு ரத்த சோகை ஏற்பட்டது. இயற்கையாக உடலில் ரத்தம் உற்பத்தியாவது குறைந்ததால் தாமிரபரணிக்கு மாதந்தோறும் ரத்தம் ஏற்றி வந்தனர்.
இதுபற்றி, அப்போலோ மருத்துவர் ரேவதிராஜிடம் செந்தில்குமார் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர், மீண்டும் ஒரு குழந்தை பெற முயற்சி செய்யுங்கள். அந்த குழந்தை பிறக்கும்போது, தொப்புள் கொடி ரத்தத்தை எடுத்து தாமிரபரணிக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என்றார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, 2008ம் ஆண்டு மே மாதம் செந்தில்குமார்-சரோஜினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேமிக்கப்பட்டு, சேத்துப்பட்டில் உள்ள லைஃப் செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் வைக்கப்பட்டது. கடந்த மார்ச் 17ம் தேதி தாமிரபரணிக்கு அப்போலோ மருத்துவமனையில் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் முழுமையாக குணமாகிவிட்டார். தாமிபரணி மறு பிறவி எடுக்க பெரும் உதவியாக இருந்துள்ளது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை எனப்படும் செல் தெரபி.
லைப்செல் இன்டர்நேஷனல் தலைவர் மயூர் அபாயா கூறுகையில், இந்தியாவில் முதல் முறையாக தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, அதன்மூலம் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை, புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது என்றார்.
வருங்காலத்தில் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு செல்வத்தை சேமிக்கின்றோமோ இல்லையோ, தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, நம் குழந்தைகளுக்கு ஏதேனும் வியாதிகள் ஏற்பட்டால், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல் மூலம் சரிசெய்யலாம்.
இதுதான் தொப்புள் கொடி உறவோ!!!.